சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் காவலாளியை கொலை செய்துவிட்டு, பொருட்களை கொள்ளை அடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சயானும், மனோஜூம் சாட்சிகளை கலைத்ததாக குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் விசாரித்தார். மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 22-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில், அவர்கள் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி நேற்று பிறப்பித்தார். அதில், இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, அவர்களது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.