சேலம்,
சேலம் மாவட்டம் அரிசிபாளையம், முத்தையாளர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரேகா (35). இவர்களது மகள் ஜனனி (15). 45 வயதான இவர் வெள்ளி தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளி தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் செலுத்த இயலாததால் வங்கியில் இருந்து கடனைத் திருப்பி அடைக்குமாறு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்து மூவரும் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.