சேலம்,
சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி தேவி (வயது 45). இவர் தனது ஸ்கூட்டரில் அம்மாபாளையம் புறாக்காடு பகுதியில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் தேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை மின்னல் வேகத்தில் பறித்து சென்றார். இதில் நிலை தடுமாறி தேவி கீழே விழுந்தார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தேவி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்து சென்றது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 30) என்பதும், அவர் சேலத்தில் உள்ள பிரபல ஓட்டலில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர்.