சேலம்
சேலத்தில் தனியார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சேலம் ஆத்தூரில் தனியார் ஜவ்வரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மரவள்ளி கிழங்குகளை அரவை செய்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் ஆலையில் மின் கசிவு ஏற்பட்டது. இதில், சாக்கு பைகள் எரிந்து, தீ விபத்து ஏற்பட்டது.
கிழங்குகளை சுத்தம் செய்வதற்கு, மூட்டைகளில் குளோரின் பவுடர் வைக்கப்பட்டிருந்தது. தீ விபத்து தொடர்ச்சியாக குளோரின் பவுடர் பகுதியில் இருந்து புகை எழுந்தது. இதனால், அதிர்ச்சியான தொழிலாளர்கள், அதனை தணிக்க தண்ணீரை ஊற்றியுள்ளனர்.
அபபோது, குளோரின் பவுடர், புகையுடன் சேர்ந்து வாயுக்கசிவாக மாறியது. இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று, தீ மற்றும் வாயுக்கசிவை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வாயுக்கசிவு பாதிப்பால், 11 பேருக்கு மூச்சுத்திணறல், சுவாச பாதிப்பு, மயக்கம் போன்றவை ஏற்பட்டன.
அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2 மணிநேரம் வரை போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.