தமிழக செய்திகள்

சேலம்: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்ததாக 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டி பகுதியை சேர்ந்த கோபிநாத் மனைவி மணிமேகலை (வயது 35). நேற்று முன்தினம் மணிமேகலை தோட்டத்திற்கு செல்வதற்காக தாரமங்கலத்தில் இருந்து பஸ்சில் சென்று தாண்டானூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்ற 3 பேர் திடீரென மணிமேகலையின் வாயை பொத்தி அவரது கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மணிமேகலை சத்தம் போட்டார். அதற்குள் அவர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்ததாக ஓமலூர் எம்.செட்டிப்பட்டி பகுதி சேர்ந்த தமிழ்ச்செல்வன் (20), 2 சிறுவர்கள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.