தமிழக செய்திகள்

சேலம்: முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு

மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி ரேவதி (வயது 38). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வாசலில் தெளிப்பதற்காக சாணம் எடுக்க அவரது உறவினர் வீட்டின் அருகே நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் ஓமலூர் செல்வதற்கு வழி கேட்டுள்ளனர். அவர்களிடம் ரேவதி வழி சொல்லிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், ரேவதியின் கழுத்தில் அணிந்திருந்த 3.75 பவுன் தாலியைப் பறித்தார். பின்னர் அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி, சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிகாலையில் பெண்ணிடம் தாலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.