தமிழக செய்திகள்

சேலம்: ஆடு, நாய், கோழிகளை வேட்டையாடும் சிறுத்தை... 5 இடங்களில் கூண்டுகள் அமைத்த வனத்துறையினர்..

வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அதன்பேரில் வனத்துறையினர் கண்ணாமூச்சி கிராமத்திற்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சேலம்,

கொளத்தூர் அருகே சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டுகள் அமைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே கண்ணாமூச்சி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்தில் நடமாடி வருகிறது. அவ்வாறு வரும் சிறுத்தை அதிகாலை நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாயிகளின் ஆடு, நாய், கோழி போன்றவற்றை வேட்டையாடி வருகிறது.

சிறுத்தை உலா

இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஆடுகள், கன்று குட்டிகள், வளர்ப்பு நாய்கள், கோழிகள் உள்ளிட்டவற்றை சிறுத்தை கொன்றுள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்தில் சிறுத்தை உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதில் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். அது தற்போது சமூக வலைத்த ளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் கண்ணாமூச்சி கிராமத்திற்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், சிறுத்தை நடமாட் டத்தால் நாங்கள் பீதியில் இருந்து வருகிறோம். எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.

இரும்பு கூண்டுகள்

அவர்களின் கோரிக்கையை ஏற்று கண்ணாமூச்சி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ள 5 இடங்களில் சிறுத்தையை பிடிக்க இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஆட்டுக் குட்டிகள் வைத்துள்ளனர்.

மேலும், அந்த பகுதிகளில் கேமராக்களை பொருத்தி வனத்துறை யினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையை பிடிக்கும் வரை இரவு 7 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT