தமிழக செய்திகள்

திருப்பூரில் வடமாநில வாலிபர் தலையில் கல்லைப் போட்டு கொலை: தூய்மைப் பணியாளர் கைது

பீடி கேட்டபோது தூய்மைப் பணியாளர் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் முகுந்த், நேற்று இரவு செட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதையில் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

பீடி கேட்டு தகராறு

அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர், முகுந்திடம் இந்தியில் பீடி கேட்டதாக கூறப்படுகிறது. முகுந்த் பீடி தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வாலிபர் முகுந்தை இந்தியில் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

கல்லால் தாக்கி படுகொலை

இதனால் ஆத்திரமடைந்த முகுந்த், அந்த வாலிபரை பின்தொடர்ந்து சென்று தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது. பின்னர் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார். இதில் படுகாயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலை தொடர்பாக முகுந்தை கைது செய்தனர்.

உயிரிழந்தவர் யார்?

இதனிடையே படுகொலை செய்யப்பட்ட வடமாநில வாலிபர் யார், அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.