கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

ஆங்கில இலக்கியத்திற்கான நெட் தேர்வில் சமஸ்கிருதம் குறித்து கேள்விகள் - சு.வெங்கடேசன் கண்டனம்

இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருதச் செழிப்புக்கு வாய்ப்பளிக்கும் செயல்களை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மத்திய அரசு நடத்திய (27/6/25) ஆங்கில இலக்கியத்திற்கான தேசிய நுழைவுத் தேர்வில் (UGC Net) பல கேள்விகள் சமஸ்கிருதம் பற்றி கேட்கப்பட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த கேள்விகளை உருவாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த கேள்விகள் அனைத்திற்கும் மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய தகுதித் தேர்வில் ஆங்கில இலக்கிய தேர்வு கேள்வித்தாளில் சமஸ்கிருதம் பற்றிய பல கேள்விகள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ரிக் வேதத்திற்கும் ஆங்கில இலக்கியத் துறைக்கும் என்ன தொடர்பு? நெருப்பை ஊகிப்பதற்கும் வில்லியம் சேக்ஸ்பியருக்கும் என்ன சம்பந்தம்? சமஸ்கிருத வியாப்திக்கும், ஜார்ஜ் ஆர்வெல்லுக்கும் என்ன சம்பந்தம் ?

தவறான பதில்களால் மதிப்பெண்கள் குறைவது புதிதல்ல, அரசின் திணிப்புகளால் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவது ஏற்க முடியாதது. சமஸ்கிருதம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை (NTA) வழங்க வேண்டும்.

இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருதச் செழிப்புக்கு வாய்ப்பளிக்கும் செயல்களை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT