சென்னை,
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் கடந்த 8 ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரத்குமார் சிகிச்சை பெற்று வருவதாக அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சரத்குமாருக்கு தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சரத்குமார் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டாலும் அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சில நாட்கள் தேவை என்பதால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சரத்குமார் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நமது நெருங்கிய உறவினர்கள் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தான் அதன் தீவிரம் புரிகிறது என்றும் வெளி இடங்களுக்கு செல்லும் போது அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.