தமிழக செய்திகள்

அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

கட்சி நன்றாக இருக்க வேண்டும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் அதில் மாற்றுக்கருத்து இல்லை என்று எஸ்.பி வேலுமணி கூறினார்.

சென்னை,

அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பிளவுபட்டுள்ளனர். இன்று சட்டசபையிலும் தவெக அரசுக்கு ஆதரவாக எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இரு அணிகளும் மாறி மாறி வாக்களித்தனர்.

இந்த நிலையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:

“அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைக்க வேண்டும். அதிமுகவை உடைக்கும் எண்ணம் இல்லை. அதிமுகவை உடைக்கிறோம் என்பது அவதூறு. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் பிரிந்து சென்ற போது நாங்கள் எதிர்த்தோம். கட்சியை ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அனைவரையும் அரவணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்று கூறினார்.