திருச்சி,
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சத்யபிரதா சாகு, தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுமே சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய முடிவினை எடுக்கும் என்றும் தெரிவித்தார். 80 வயதுக்கு மேல் இருக்கும் வாக்காளர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படுகிறது, ஆனால் அது கட்டாயப்படுத்தப்படவில்லை, நேரில் வந்து வாக்கு செலுத்துபவர்கள் செலுத்தலாம் என்றும் அவர் கூறினார்.