சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக சார்பில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள், நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.