சென்னை,
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணா விரதம் இருந்து வருகிறார். 21-வது நாளாக உண்ணா விரதம் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள உண்ணாவிரதப் பந்தலில் இருந்து சோனம் வாங்சுக்கை இன்று காலையில் போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சோனம் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
டெல்லியில்
உண்ணா நோன்பிருக்கும்
வாங்சுக் உயிரைக்
காப்பாற்றுங்கள்
உயிரின் கடைசிச் சொட்டு
வற்றினாலும் வற்றிவிடும்;
பிறகு எதுவும் செய்ய இயலாது
அவரது உயிர்
உடல் சார்ந்தது மட்டுமல்ல;
இந்திய உரிமை சார்ந்தது;
நாட்டு நலன் சார்ந்தது
சம்பந்தப்பட்டவர்கள்
தன்னகங்காரத்தைத்
தள்ளிவைத்து
ஓர் இந்தியனை மீட்டெடுங்கள்;
இந்தியாவின்
ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்
அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.