சென்னை,
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிட விபரங்களை, வரும் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்த, மாவட்ட வாரியாக காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட, அனைத்து வகை ஆசிரியர் காலியிடங்களை, வரும் 23ம் தேதிக்குள், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியருக்கோ அல்லது துறைக்கோ எவ்வித முன் தகவலும் தராமல், தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக பணிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்கள் உடனடியாக காலியிடமாக அறிவிக்கப்படும்.
இதன் மூலம் நீண்ட நாட்களாக பணிக்கு வராமல் மாணவர்களின் கல்வி பாதிப்படைவதை தடுத்து, அந்த இடத்திற்கு பொது மாறுதல் கலந்தாய்வு மூலமாகவோ அல்லது புதிய நியமனம் மூலமாகவோ மாற்று ஆசிரியரை விரைவாக நியமிக்க முடியும். ஆசிரியர் காலியிடங்களை பட்டியலை பதிவேற்றிய பின், திருத்த இயலாது.
இதனால் பட்டியலில் ஏற்படும் தவறுகளுக்கு, முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.