கோவை,
பொள்ளாச்சி அருகே உள்ள அரசுப் பள்ளியில் இருந்த குடிநீரை குடித்த 9 மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் பள்ளி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பள்ளி இடைவேளையில் அங்கிருந்த குடிநீரை மாணவிகள் சிலர் குடித்தனர். தண்ணீர் குடித்த சில நிமிடங்களிலேயே, அடுத்தடுத்து மாணவிகளுக்கு திடீர் மயக்கமும் உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும், ஆசிரியர்களும் உடனடியாகப் பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
மயக்கமடைந்த 9 மாணவிகளையும் உடனடியாக மீட்டு, அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மாணவிகளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. பள்ளிக்கு வழங்கப்பட்ட குடிநீரில் ஏதேனும் நச்சுத்தன்மை கலந்திருந்ததா அல்லது தண்ணீர் தொட்டி முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததே இதற்குக் காரணமா என்பது குறித்து கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆய்வகப் பரிசோதனைக்காக அந்தப் பள்ளியின் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.