பள்ளியை முற்றுகையிட்ட ஊர்மக்கள் 
தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு; ஈரோட்டில் பரிதாபம்

பள்ளி வளாகத்தில் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார ஒயரை சிறுவன் யோகேஷ் மிதித்தான்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அரசுப் பள்ளியில், மதிய உணவு இடைவேளையின் போது அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசு உயர்நிலைப்பள்ளி

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் யோகேஷ் (வயது 11). அந்த சிறுவன் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதிய உணவு இடைவேளையின் போது, மாணவன் யோகேஷ் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்ததான்.

மின்சாரம் தாக்கி மாணவன் பலி

அப்போது, பள்ளி வளாகத்தில் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார ஒயரை சிறுவன் யோகேஷ் மிதித்தான். இதில் பலத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து வந்த போலீசாரும், அதிகாரிகளும் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வளாகத்திற்குள் மின்சாரக் கம்பி அறுந்து கிடந்தது குறித்து பள்ளி நிர்வாகமும், மின்வாரியமும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததே இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.