புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ்சில் பயணம் செய்வதால் பெற்றோர் கலக்கமடைகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இருந்து பேராவூரணி வழியாகப் பட்டுக்கோட்டை நோக்கி தினமும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கும் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் இந்த வழித்தடத்தில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தினால், பள்ளி மாணவர்கள் வேறு வழியின்றி இந்த தனியார் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணம் செய்கின்றனர். குறிப்பாக, பேருந்தின் உட்புறத்தில் இடமில்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பின் மற்றும் முன் பக்கப் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், சிலர் கூரை மீது ஏறும் நிலையிலும் பயணிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
பஸ்கள் வளைவுகளில் திரும்பும்போதும், வேகத்தடைகளைக் கடக்கும்போதும் படியில் தொங்கும் மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே ஆலங்குடி அருகே பஸ்சின் படிக்கட்டில் பயணித்த புவியரசன் என்ற 10-ஆம் வகுப்பு மாணவன் கீழே விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை பெரும் மன உளைச்சலில் இருப்பதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதிகளுக்குப் புறம்பாக மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்கள் மீது கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை தேவை என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.