திருச்சி தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை குன்னத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு தனது மொபட்டில் வந்தார். டி.வி.எஸ். டோல்கேட் அருகே வந்தபோது புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் பஸ், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.