கோவை,
கோவையை சேர்ந்த 6 வயது சிறுமி, ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியை அவருடைய தாய் தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, பெங்களூருவில் வேலை செய்து வருகிறார்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சிறுமியின் தாயார் கோவை வந்து தனது மகளை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றார். அவர் தனது மகளை கவனித்தபோது மிகவும் சோர்வுடன் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சிறுமியை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தபோது உடலில் மறைவான இடத்தில் காயம் இருந்தது.
இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது பள்ளி முடிந்ததும் முதல் ஆளாக வேனுக்கு வரும்போது டிரைவர், சாக்லெட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அழுதுகொண்டே கூறினார்.
இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி வேன் டிரைவர் கணேசன் (43 வயது) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.