தமிழக செய்திகள்

வீட்டில் இருந்து நகையை தோழிக்கு கொடுத்து உதவிய பள்ளி மாணவி; பெற்றோர் கண்டிப்பால் தற்கொலை

புகாரின் பேரில் போலீசார், மஹதியின் தோழியிடம் இருந்து அந்த நகையை மீட்டு மஹதியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

நாகை

வீட்டில் இருந்து நகையை எடுத்து, தோழிக்கு கொடுத்து உதவிய பள்ளி மாணவி, பெற்றோரின் கண்டிப்பால் தற்கொலை செய்து கொண்டார்.

நாகை அந்தணப்பேட்டை புடவைக்கடை தெருவை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி வாசுகி. இவர்களது மகள் மஹதி (வயது 16). இவர், நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மஹதியின் தோழி ஒருவர் மஹதியிடம், தனது உறவினர் கடன் பிரச்சினையில் இருக்கிறார் என்றும் அவர்களுக்கு பணம் அல்லது நகை கொடுத்து உதவும்படியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டுள்ளார்.

தோழிக்கு உதவி

இதனால் மஹதி தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை எடுத்து தனது தோழிக்கு கொடுத்துள்ளார். இந்த தகவல் மஹதியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனது மகள் அவரது தோழிக்கு கொடுத்த நகையை மீட்டுத்தரும்படி மஹதியின் பெற்றோர், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார், மஹதியின் தோழியிடம் இருந்து அந்த நகையை மீட்டு மஹதியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோருக்கும், மஹதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மஹதி நேற்று முன்தினம் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் நாகை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மஹதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாசுகி கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோழிக்கு நகை கொடுத்ததால் பெற்றோர் இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.