தமிழக செய்திகள்

கராத்தே கற்றுக்கொடுப்பதாக கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரியலூரில் பரபரப்பு

பாதிக்கப்பட்ட மாணவிகள் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகரை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் கர்ணன்(வயது 36). இவர் ஒரு பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக்கொடுப்பதாகக்கூறி, 20-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த 24-ந் தேதி ஒரு மாணவி 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் குழந்தைகள் நல களப்பணியாளர் வீரமணி தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வீரமணி புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக இருந்த கர்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று செந்துறை பிரிவு ரோடு அருகே கர்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT