திருச்செந்தூர்,
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனிடையே, ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முன்தினம், மறுதினங்களில் காலையில் கடல் உள்வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூரில் இன்று 2-வது நாளாக கடல் உள்வாங்கியது. சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி கடலில் புனித நீராடியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
கடல் உள்வாங்கியுள்ள நிலையில் பக்தர்கள் பாதுகாப்பாக கடலில் குளிக்கும்படி கோவில் நிர்வாகம், காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.