தமிழக செய்திகள்

திருச்செந்தூரில் திடீரென 70 அடிக்கு உள்வாங்கிய கடல்

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாகும்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று பவுர்ணமி என்பதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் சுமார் 70 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும் பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலில் புனித நீராடினர். ஒருசிலர், பாறைகளால் கடலில் நீராட முடியாமல் அவதியடைந்தனர்.