தமிழக செய்திகள்

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: தமிழக மக்கள் பங்கேற்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

தமிழக மக்கள் தங்களின் சுயவிவரங்களை இணையவழியில் சுயமாகப் பதிவேற்றம் செய்யுமாறு நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“நாட்டின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு: சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) முறையில் தமிழக மக்கள் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்!

நாட்டின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் தொடங்குகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் குடும்ப விவரங்களை இணையதளம் வழியாகத் தாங்களாகவே பதிவு செய்யும் (Self-enumeration) வசதி இன்று தொடங்குகிறது.

பொதுமக்கள் தங்களின் வீடுகளின் நிலை, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி உள்ளிட்ட 33 விவரங்கள் அடங்கிய தங்களின் சுயவிவரங்களை, வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் https://se.census.gov.in என்ற இணையதளத்தில் எளிதாகப் பதிவேற்றம் செய்யலாம்.

2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கு மிக அவசியமானது. எனவே, தமிழக மக்கள் அனைவரும் தங்களின் சுயவிவரங்களை இணையவழியில் சுயமாகப் பதிவேற்றம் செய்து, இந்த தேசிய டிஜிட்டல் பணியில் முழுமையாகப் பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.