ஈரோடு,
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக 9 முறை பதவி வகித்த செங்கோட்டையன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் உள்ள வெள்ளாங்கோவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள த.வெ.க. அலுவலகத்தை செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-
“எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. பெரும்பான்மை இடங்களைப் பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். த.வெ.க. தலைவர் விஜய்யின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. கோபி தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இதற்காக நாளை மறுநாள்(6-ந்தேதி) விருப்ப மனு அளிக்க உள்ளேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.