ஓசூர்,
ஒசூரில் இருந்து பாகலூர் வழியாக பேரிகைக்கு டவுன் பஸ் சென்றது.இதனை டிரைவர் ரமேஷ் ஓட்டிச்சென்றார். இதில் பயணித்த பயணி ஒருவர், பாகலூர் அருகே அச்சந்திரம் என்ற கிராமத்தில் இறங்க வேண்டிய நிலையில், டிரைவர் அங்கு நிறுத்தாமல் அதனை கடந்து தும்மனப்பள்ளி என்ற கிராமத்தில் பஸ்சை நிறுத்தி அந்த பயணியை இறக்கி விட்ட தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பயணி, பஸ்சின் முன்புறமாக சென்று டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால், அதனை பொருட்படுத்தாத அந்த டிரைவர், பஸ்சின் முன்புறத்தில் அந்த பயணி நிற்பதை கூட கண்டுகொள்ளாமல் பஸ்சை இயக்கினார்.
இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த அந்த பயணி உயிரை காப்பாற்றி கொள்ள பஸ் சின் முன்பக்க கண்ணாடிக்கு கீழே கைகளால் இறுகப்பிடித்து தொங்கியவாறே சென்றார். ஆனாலும் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் இயக்கினார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்ற உடன் டிரைவர் பஸ்சை நிறுத்தியதாக தெரிகிறது.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பஸ் டிரைவர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.