நெல்லை,
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி, கொண்டாநகரம், ராஜீவ்காந்தி நகர், சிவசக்தி நகர், பழவூர், பட்டன்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு நாட்களில் நள்ளிரவில் திருடு போயின.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரஞ்சித் (வயது 30), மகாராஜன்(56) உள்ளிட்ட 6 பேர் அளித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பல்லிக்கோட்டை மற்றும் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள், அரசன்குளத்தைச் சேர்ந்த இசக்கிராஜா(19), உகந்தான்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம்(19) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து திருடப்பட்ட 6 பைக்குகளும் மீட்கப்பட்டன. மேலும் இந்தத் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய, தற்போது தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.