தமிழக செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்: தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் மீது கடுமையான தாக்குதல் - 13 பேர் சஸ்பெண்ட்

கோவை தனியார் கல்லூரியில் சீனியரை, ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை,

கோவை மதுக்கரை அருகே பாலக்காடு சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த சீனியர் மாணவர் ஒருவரை, பல ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து தாக்கி துன்புறுத்திய சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதல் காட்சிகளை சக மாணவர் யாரோ ஒருவர் தனது செல்போனில் எடுத்துள்ளார். இந்தக் காட்சிகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜூனியர் மாணவர்கள் 13 பேர், சீனியர் மாணவரை அடிக்கும் இந்த தாக்குதல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்களின் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வகையில் இருந்தது.

முன்னதாக, ஜூனியர் மாணவர்களின் பணத்தை சீனியர் மாணவர் திருடியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பல ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து கல்லூரி விடுதியில் சீனியர் மாணவரை கடுமையாக தாக்கி உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் இது போன்ற வன்முறை கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT