சென்னை,
சென்னை மாநகராட்சி நிர்வாகம் இதுவரை கண்டிராத கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. முடிவடைந்த திட்டப்பணிகளுக்கான நிலுவை தொகை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் சாலைகள், பாலங்கள், மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி ரூ.2,000 கோடிக்கும் மேல் நிலுவை தொகை வைத்திருக்க்கிறது. இதனால் புதிய டெண்டர்களை எடுக்க யாரும் முன்வராத சூழல் ஏற்பட்டுள்ளது.
நகரின் திடக்கழிவு மேலாண்மை பணிகளை கவனித்து வரும் 'உர்பேசர் சுமீட்' தனியார் நிறுவனத்திற்கு மட்டும் மாநகராட்சி ரூ.450 கோடி பாக்கி வைத்துள்ளது. இந்த தொகை வழங்கப்படாவிட்டால், நகரில் குப்பை அள்ளும் பணி முற்றிலும் முடங்கி, சென்னை மாநகரமே சுகாதார சீர்கேட்டில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்ட ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்களை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. வருவாய் துறை அலுவலர்கள்தங்களின் வார்டு பகுதிகளில் நேரடியாகச் சென்று நீண்ட நாட்களாக வரி செலுத்தாதவர்களிடம் நிலுவை தொகையை வசூலித்து வருகின்றனர்.
வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சொத்து மதிப்புகளை மறுஆய்வு செய்து, விடுபட்ட வரிகளை முழுமையாக வசூலிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.