கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

காவிரியில் கலக்கும் கழிவுநீர்! கண்டுகொள்ளாத முதல்-அமைச்சர் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் ஜோசப் விஜய் வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்றிருப்பது விரயச் செலவு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக நீர்நிலைகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கருவிகள் பழுதடைந்து விட்டதாகவும், இதனால் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கோரையாற்றில் வெளியேற்றப்படுவதாகவும், சுத்திகரிப்பு தொட்டிகளில் நிரம்பி வழியும் கழிவுநீரானது அங்கங்கே தேங்குவதால் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

பஞ்சப்பூர், கருமண்டபம், எடமலைப்பட்டி, உறையூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக பாய்ந்து காவிரி ஆற்றில் கலக்கும் கோரையாறு, திருச்சி மாநகரத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. அதுமட்டுமன்றி, 75 கி.மீ. நீளம் கொண்ட இந்த கோரையாற்றின் வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள ஏராளமான பாசனக் குளங்கள் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகளையும் பெறுகின்றன. கர்நாடக காங்கிரஸ் அரசின் ஆணவத்தாலும், தவெக அரசின் அலட்சியத்தாலும், தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்து குறைந்து, நமது விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரமும், மக்களின் குடிநீர் தேவையும் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கையிருப்பு உள்ள தண்ணீரை சுகாதாரமான முறையில் பாதுகாத்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, ஏற்கனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களிடம் முதலீடுகளை ஈர்க்க, மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் ஜோசப் விஜய் வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்றிருப்பது விரயச் செலவு. மேட்டூர் அணையில் நீர் திறப்பதை விளம்பரப்படுத்திக் கொள்ள ரூ.5 கோடிக்கும் அதிகமாக வெட்டி செலவு செய்த ஜோசப் விஜய், தமிழக நீர்நிலைகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்! மக்களின் ஆரோக்கியத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT