கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர், புதுவீட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரதீசன்(எ) ஸ்டாலின் (வயது 36). ஆய்வகத் தொழில்நுட்பவியலாளராக (Lab Technician) பணியாற்றி வந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரதீசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நீதிபதி சுந்தரய்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துக்குமாரி ஆஜராகி வாதிட்டார்.
வழக்கின் அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ரதீசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.