தமிழக செய்திகள்

குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா தீர்ப்பு கூறினார்.

திருவண்ணாமலை,

3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் நதோன் தாலுகாவை சேர்ந்த பிரகாஷ் சந் மகன் தேசுராஜ் (வயது 42). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பில்லாந்தாங்கல் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து கூலி தொழில் செய்து வந்து உள்ளார்.

பாலியல் சில்மிஷம்

கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் வருவதை அறிந்த தேசுராஜ் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேசுராஜை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

தீர்ப்பு

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா தீர்ப்பு கூறினார். அதில் பெண் குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி தேசுராஜூக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து தேசுராஜை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.