தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு அத்துமீறி வீடுபுகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடம்பூரைச் சேர்ந்த சேர்மராஜ் (வயது 62) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (PCR Court) நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வசீத்குமார் நேற்று சேர்மராஜ் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மணியாச்சி உட்கோட்ட டி.எஸ்.பி. அஜுகுமார், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தற்போது இன்ஸ்பெக்டர்) அன்னலட்சுமி, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பூங்குமார், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு ராதிகா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.