தமிழக செய்திகள்

அரசு விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை - 4 பேர் சஸ்பெண்ட்

துப்புரவு பணியாளர் ராதிகா மற்றும் அவரது நண்பர் ரகுபதி ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

வாழப்பாடி,

வாழப்பாடியில் அரசு பள்ளி மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக விடுதி காப்பாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பாலியல் தொல்லை

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவிகள் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வந்தனர். இந்த விடுதியில் தூய்மை பணியாளர் ராதிகா (வயது 45) என்பவர் பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கி இருந்த 2 மாணவிகளை ராதிகாவின் நண்பரான ரகுபதி (30) வெளியில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் துப்புரவு பணியாளர் ராதிகா மற்றும் அவரது நண்பர் ரகுபதி ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

4 பேர் சஸ்பெண்ட்

இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் சின்னசாமி விசாரணை நடத்தினார். தொடர்ந்து விடுதி காப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் கலைச்செல்வி, இரவு காவலர் சுமதி, துப்புரவு பணியாளர் ராதிகா ஆகிய 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவர்களுக்கு பதிலாக அருகிலுள்ள அரசு விடுதிகளில் பணியாற்றுபவர்கள் தற்காலிகமாக பணியாற்றவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.