திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தில் ஒரு அரசுப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரி யர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் மங்கலம் கிராமத்தை சேர்ந்த ரவி(வயது 58), இடைநிலை ஆசிரியர் திருவண்ணாமலை தென்றல் நகரை சேர்ந்த முரளிதரன்(42) ஆகியோர் பள்ளியில் மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் 1098 என்ற உதவி எண்ணிற்கு புகார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் மாலை விசாரணைக்காக தலைமை ஆசிரியர் ரவி, இடைநிலை ஆசிரியர் முரளிதரன் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து, திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.