தமிழக செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டல்: டிரைவர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் டிரைவரை போலீசார் கைதுசெய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 20), டிரைவரான இவர் ஆரணி பகுதியில் ஒரு வீட்டுக்குள் புகுந்து பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வாயில் துணி வைத்து அமுக்கி தூக்கி சென்று வீட்டின் வெளியே பாலியல் சீண்டலில் ஈடு பட்டதாக தெரிகிறது.

சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்க்கும் போது செல்வம் தப்பி ஓடினார். உடனே அந்த பெண்ணை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு கிராம மக்கள் விரட்டி சென்று செல்வத்தை பிடித்து தர்ம அடி கொடுத்து களம்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் காஞ்சனா 'போக்சோ' சட்டத்தில் செல்வத்தை கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர் செல்வத்தை வேலூர் மத்திய ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.