தமிழக செய்திகள்

செசல்ஸ் நாட்டின் ஜனாதிபதி 5 நாட்கள் பயணமாக இந்தியா வருகை

பேட்ரிக் ஹெர்மைனியை அமைச்சர் எம்.மதிவேந்தன், மேயர் பிரியா ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

சென்னை,

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் 115 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய குடியரசு நாடு செசல்ஸ். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செசல்ஸ் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேட்ரிக் ஹெர்மைனி வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, பேட்ரிக் ஹெர்மைனி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதியான பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பேட்ரிக் ஹெர்மைனியை தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், சென்னை மேயர் பிரியா மற்றும் மூத்த அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். தொடர்ந்து அவர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மராட்டிய மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியா வருகை தரும் செசல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மைனி, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடியுடன் இருதரப்பு, மண்டல மற்றும் பரஸ்பர நலன்களுக்கான சர்வதேச விவகாரங்கள் ஆகியவை பற்றி ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.