தமிழக செய்திகள்

சனிப்பெயர்ச்சி: விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை ஒட்டி அதிகளவில் பக்தர்கள் வருவார்கள்.

விழுப்புரம்,

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் திரு நள்ளாறில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரபகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

மேலும் சனீஸ்வர பகவான் கோவிலில் 2 ½ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். நாளை (வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்றைய தினம், காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.

சனிப்பெயர்ச்சியின்போது திருநள்ளாறு கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை ஒட்டி அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், பகல் 1.05 மணிக்கு நாகை சென்றடையும். மறுமார்க்கமாக பகல் நாகையில் இருந்து 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.