கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்: டிஜிட்டல் கைது செய்ததாக கூறி என்ஜினீயரிடம் ரூ.45 லட்சம் மோசடி

செல்போன் சிம் கார்டு வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

ஈரோடு,

கோபியில் டிஜிட்டல் கைது செய்ததாக கூறி என்ஜினீயரிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கைது

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த 65 வயதான ஓய்வு பெற்ற என்ஜினீயர் ஒருவரின் செல்போனுக்கு ஒரு வாட்ஸ்-அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய வர், தன்னை மும்பை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும், ஓய்வு பெற்ற என்ஜினீயரது அடையாள அட்டைகளை வைத்து செல்போன் சிம் கார்டு வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் அவரை டிஜிட்டல் கைது செய்து வைத்திருப்பதாக கூறி உள்ளார்.

மும்பை போலீசார்

இதனால் பதற்றம் அடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது செல்போனுக்கு ஒரு 'லிங்க்' வந்தது. பின்னர் அவர் அதை திறந்து பார்த்தார். மீண்டும் மும்பை போலீசார் என அறிமுகம் செய்து அவருக்கு வாட்ஸ்-அப் அழைப்பு வந்தது. அவர் அவர்கள் கூறியபடி லிங்கில் விவரங்கள் பதிவு செய்துள்ளார்.

அப்போது வந்த ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (ஓ.டி.பி.) அவர் பதிவு செய்தார். சிறிது நேரத்தில் ஓய்வு பெற்ற என்ஜினீயரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.45 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. மேலும் அவர் கணக்கை சோதனை செய்தபோது பணம் மாயமாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டபோது அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 72 சைபர் கிரைம் வழக்குகள்

ஈரோடு மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வடிவங்களில் மோசடியாளர்கள் பொதுமக்களுக்கு வலை விரிக்கிறார்கள். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தொடர்ந்து பொதுமக்கள் ஏமாந்து வருகிறார்கள்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

தற்போது ரூ.1 லட்சத்துக்கு மேல் மோசடி செய்யப்பட்டால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 72 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். போலி செயலிகளை திறக்க வேண்டாம். இணையதளம் மூலமாக யாருடனும் தங்கள் விவரங்களை பகிர வேண்டாம். டிஜிட்டல் கைது என்று யாராவது மிரட்டினால் பயப்படாமல் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT