சேலம்,
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவர்கள் 2 பேர். அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து அந்த சிறுமியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 2 சிறுவர்களையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த சிறுவர்கள் இருவரும் காப்பகத்தில் கொண்டு செல்லப்பட்டனர்.
கைதான சிறுவர்களில் ஒருவன் சமீபத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான். அவன் கைது செய்யப்பட்டு காப்பகத்தில் அடைக்க அழைத்து செல்லப்படுவதற்கு முன்னதாக, மாணவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500-க்கு 470 மதிப்பெண்கள் எடுத்திருந்த விவரம் தெரியவந்துள்ளது. மாணவனின் மதிப்பெண்ணை நினைத்து பெருமைப்பட முடியாத வகையில் அவனது செயல் அமைந்துள்ளதே என்று போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர்.