தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதனால் தூத்துக்குடியில், தொடர்ந்து நீடித்து வந்த பதற்ற நிலையை தணிப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 144 தடை உத்தரவு நேற்று முடிவுக்கு வந்தது.
இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓட தொடங்கியுள்ளன. நள்ளிரவு முதல் இணையதள சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. இயல்பு நிலை திரும்பியதனால் அங்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்ததனை அடுத்து துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு சென்றார்.
இதற்காக நேற்றிரவு மதுரை சென்ற அவர் கோவில்பட்டியில் தங்கினார். அங்கிருந்து இன்று காலை காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டார்.
இதன்பின் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று அவர்களின் உடல்நலம் பற்றி கேட்டறிந்துள்ளார்.
அவருடன் அமைச்சர்கள் ஜெயகுமார், கடம்பூர் ராஜு மற்றும் ராஜலெட்சுமி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.