தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் எதிரே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று காலை வழக்கம்போல் குழந்தைகள் பள்ளிக்கு வந்திருந்தனர். அப்போது குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் அங்கிருந்த சுமார் 40 குழந்தைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை உணவு கிடைக்காமல் குழந்தைகள் பசியில் கதறி அழுதார்கள். இந்த நிலையில், அந்த 40 குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரினை தொடர்ந்து, கோவில்பட்டி தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் செல்வி வினோதா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.
இது தொடர்பாக கோவில்பட்டி தொடக்கக்கல்வி மாவட்ட அலுவலர் செல்வி விநோத கூறியதாவது:- மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் குழந்தைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாக கோவில்பட்டி தொடக்கக்கல்வி மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.
காலை உணவு குழந்தைகளுக்கு தொடர்ந்து தடையின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.