தமிழக செய்திகள்

சென்னை - சிங்கப்பூர் இண்டிகோ விமானம் புறப்பட பல மணிநேரம் தாமதம்: பயணிகள் கடும் அவதி

விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர்.

சென்னை,

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர்.

ஆனால், விமானம் சென்னையில் இருந்து புறப்படவில்லை. விமானம் பல மணிநேரமாக ஓடுதளத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. விமானம் புறப்படாததற்கான காரணம் குறித்தும் விமான ஊழியர்கள் பயணிகளிடம் கூறவில்லை. விமானத்தில் ஏசி-யும் அவ்வப்போது ஆப் செய்யப்பட்டது. பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறங்கவும் அனுமதிக்கப்படவில்லை. பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட எந்த வசதியும் செய்துதரப்பிடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

7.20 மணிக்கு புறப்படவேண்டிய விமானம் மதியம் 12 மணிவரை புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மதியம் 2 மணிக்கு இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. 7.20 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானத்தில் விமானிகள் பணிநேரம் முடிந்ததால் விமானத்தில் இருந்து இறங்கியுள்ளனர். பின்னர், அடுத்த ஷிப்ட் வரும் விமானிகள் பணிக்கு வர தாமதம் ஆனதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது .