சிவகங்கை,
சிவகங்கையில் அரசு பஸ், சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை - பரமக்குடி நான்கு வழி சாலையில் இன்று மதியம் சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த சுற்றுலா வேனில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இன்று மதியம் சுற்றுலா வேன் சென்றபோது திடீரென சாலையின் மறுபுறத்தில் இருந்து அரசு பஸ் திரும்பியுள்ளது. அப்போது, அரசு பஸ் மீது சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சுற்றுலா வேன், அரசு பஸ்சில் பயணித்தவர்கள் என மொத்தம் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேவேளை, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.