ஸ்கேட்டிங் மாரத்தான் 
தமிழக செய்திகள்

தென்காசியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் மாரத்தான்: 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

சற்றும் சளைக்காமல், 80 நிமிடங்கள் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து அவர்கள் இலக்கை நோக்கி பாய்ந்தனர்.

தென்காசி,

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உலக சாதனை படைக்கும் நோக்கத்துடன் இந்த ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

உலக சாதனை

குளோபல் டேலண்ட் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் எலைட் லெஜெண்ட்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆகிய 3 முக்கிய உலக சாதனை அமைப்புகளின் புத்தகங்களில் இடம் பிடிக்கும் வகையில் இந்த சாதனை முயற்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

400 மாணவ-மாணவிகள் குவிந்தனர்

இந்த மாரத்தான் போட்டியில் தென்காசி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது ஸ்கேட்டிங் காலணிகளுடன் ஆவலோடு வந்து குவிந்தனர்.

80 நிமிடங்கள் இடைவிடாத சாதனை

போட்டி தொடங்கியதும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மாணவர்களும் கைகளில் தேசிய கொடியை ஏந்தியபடி, சாலைகளில் விறுவிறுப்பாக ஸ்கேட்டிங் செய்ய தொடங்கினர். சற்றும் சளைக்காமல், 80 நிமிடங்கள் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து அவர்கள் இலக்கை நோக்கி பாய்ந்தனர். மாணவர்களின் இந்த அசாத்திய வேகம் மற்றும் திறமையை கண்டு அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வியப்பில் ஆழ்ந்தனர்.

சான்றிதழ்கள்

வெற்றிகரமாக உலக சாதனை இலக்கை எட்டிய அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.