தேன்கனிக்கோட்டை,
அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் மண்டை ஓடு, தொடை எலும்பு மற்றும் நொறுங்கிய செல்போன் கண்டெடுக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி யாரேனும் கொலை செய்யப்பட்டார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பனையூர் கிராமத்தையொட்டி, அடர்ந்த காப்பு காடு உள்ளது. இங்குள்ள குந்துக்கோட்டை வனப்பகுதியில் வனக்காப்பாளர் சிவக்குமார் ரோந்து சென்றார். அப்போது அங்கு மனித மண்டை ஓடு மற்றும் தொடை எலும்பு, ஒரு ஜோடி செருப்பு மற்றும் உடைந்த செல்போனின் உதிரி பாகங்கள் கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், வனத்துறையினர் அஞ்செட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று வனப்பகுதியில் கிடந்த மண்டை ஓடு மற்றும் பொருட்களை கைப்பற்றி பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே பனையூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இறந்தவர் அவராக இருக்கலாமா? என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இறந்தவரின் எலும்பு மற்றும் மண்டை ஓட்டை பரிசோதனை செய்த பின்பு தான் அவரது வயது மற்றும் விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். வனப்பகுதியில் மண்டை ஓடு, எலும்பு கிடந்த சம்பவம் அஞ்செட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.