திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கம் சோதனை சாவடி அருகே மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து மயிலம் நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் மறித்து, சோதனை செய்தனர்.
அதில் காருக்குள் 30 அட்டை பெட்டிகளில் 1440 மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரை ஓட்டிவந்தவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் அவர் புதுச்சேரி நெல்லித்தோப்பு மார்க்கெட் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். மேலும் கார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், அவர் எங்கு கடத்தி சென்றார்? இதற்கு பின்னால் யார் உள்ளனர்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.