கோவை,
கோவை பகுதிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சோலார் மின்உற்பத்தி திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த திட்டங்களில் முதலீடு செய்ய நிறுவனங்கள் தயங்கும் நிலை உள்ளது.
நவீன காலத்தில் எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே அதை இயக்க தேவையான மின்சார தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை பூர்த்தி செய்ய காற்றாலை, சோலார் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் உற்பத்தி திட்டங்கள் உதவுகின்றன. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாக சோலார் மின் உற்பத்தி செய்ய கட்டமைப்பு வசதி உள்ளது. கோவையிலும் சோலார் மின் உற்பத்தி கட்டமைப்புகள் தொழில் நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒப்புதல் பெறப்பட்ட சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சோலார் மின் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-
கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் குறிப்பாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதற்கு முன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைப்பதற்காக சோலார் மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. தேர்தலுக்கு பிறகு த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒப்புதல் பெறப்பட்ட சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் சோலார் மின் உற்பத்தித்துறையில் புதிதாக முதலீடு செய்ய பலரும் தயங்குகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சோலார் மின் உற்பத்தி திட்டங்களில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.