சென்னை,
விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியில் பட்டியிலயின மக்களின் நடமாட்டத்தை முடக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ள தீண்டாமை சுவரை உடனடியாக இடிக்க வலியுறுத்தி, சென்னை தலைமை செயலக வளாகத்தில் நபர் ஒருவர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 2010-ம் ஆண்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்து 10 அடி உயரத்திற்கு ஒரு பெருஞ்சுவர் கட்டப்பட்டது. இந்த சுவரானது, அங்கு வசிக்கும் சுமார் 350 பட்டியிலயின குடும்பங்களின் அத்தியாவசிய போக்குவரத்தை 16 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் முடக்கியுள்ளது.
பட்டியிலயின மக்கள் பொது பாதை, பள்ளி மற்றும் பொதுக் கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளை பயன்படுத்த முடியாதவாறு இந்த சுவர் தடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சுவரை அகற்றக்கோரி உள்ளூர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், தொடர்ந்து காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் கடும் விரக்தியடைந்த வ.புதுப்பட்டியை சேர்ந்த நபர் ஒருவர், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி நேரடியாக சென்னைக்கு விரைந்தார்.
உடனடியாக தீண்டாமை சுவரை இடி பட்டியிலயின மக்களின் வாழ்வுரிமையை பறிக்காதே!" என முழக்கமிட்டு தனிநபராய் போராட்டத்தில் குதித்தார். முக்கியப் பாதுகாப்பு வளையமான தலைமை செயலகத்திற்குள் நபர் ஒருவர் திடீரென முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலைமைச் செயலகத்தில் முட்டி போட்டு நடந்து வந்த நபரை, குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார்
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க போலீசார் அறிவுறுத்தினர்.
அவரிடமிருந்த கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்று கொண்டதோடு, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே விருதுநகர் சிவகாசி விஸ்வநாதம் பகுதியில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர் அதிகாரிகளால் இடித்து தள்ளப்பட்ட நிலையில், இந்த வ.புதுப்பட்டி சுவரையும் இடிக்க அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தத் திடீர் தனிநபர் போராட்டத்தால் தலைமை செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.